சென்னை: மருத்துவப் படிப்பில் சேர 15ஆயிரத்து 336 மாணவர்கள் இதுவரை விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர்.
பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வில் இன்று(நவ.08) காலை 9 மணி வரையில் 15,336 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த படிப்புகளுக்கான மருத்துவக் கலந்தாய்விற்கு நவம்பர் மூன்றாம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
இணையதளம் மூலம் நவம்பர் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் மருத்துவ கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம். நவம்பர் 16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. விண்ணப்பித்த மாணவர்களின் விவரத்தை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அதில், 'தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ்(பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்) மருத்துவப் படிப்பில் சேர 19 ஆயிரத்து 903 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். அதில் 14,154 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். 10,789 மாணவர்கள் முழுமையாக விண்ணப்பத்தை பூர்த்தி சமர்ப்பித்துள்ளனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர 10 ஆயிரத்து 244 மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். அதில் 8,528 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 4,547 மாணவர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி சமர்ப்பித்துள்ளனர்' என்று இருந்தது.
மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கு முன்னர் நன்றாக சரிபார்த்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கு முன்னர் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம். அதன் பின்னர் திருத்தம் செய்ய முடியாது என்பதால், கவனமுடன் இணையத்தில் பதிவு செய்ய வேண்டுமென மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் செல்வராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.