சென்னை கீழ்ப்பாக்கம் ஈவேரா சாலையில் என்எல்சி நிறுவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வணிகம் பிரிவில் முதன்மை மேலாளராக ரகு என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தனர். அப்போது சக ஊழியர் மடியிலிருந்து கீழே விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை காப்பற்ற முயன்றனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, கீழ்ப்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவலர், ரகுவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் ரகுவுக்கு இரண்டு மாதத்துக்கு முன்பு புற்றுநோய் 4ஆவது நிலை எட்டியதாகவும், மேலும் அவரது தாயாரும் உடல் நிலை பாதிப்படைந்து தீவிர சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மன உளைச்சலுக்கு ஆளானதால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
ஆந்திரா மாநிலம் சித்தூரை பூர்விகமாகக் கொண்ட ரகுவுக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலை என தெரிய வந்தாலும், ரகுவின் மெயில் மற்றும் செல்போனை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.