மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராகும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் பதவியேற்பு விழா நாளை இரவு ஏழு மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் வெளிநாட்டுத் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
மேலும், இதில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நடிகர் ரஜினிக்கு நட்பு ரீதியாக விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்று பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கனவே அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்கான எவ்விதமான முடிவும் இதுவரை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து அவரது அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு நாம் பேசியபோது, பொதுவாக இறப்பு, பிறந்தநாள் விழாக்கள், சிலைகளுக்கு மாலை அணிவித்தல் போன்ற சம்பிரதாய சடங்குகளில் கலந்துகொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டாதவர் கமல்.
எனவே, பிரதமர் பதவி ஏற்பு விழாவில் அவர் கலந்துகொள்வது குறித்து இன்னும் முடிவாகவில்லை என தெரிகிறது. இதனால் அவர் நாளை நடைபெறும் விழாவில் கலந்துகொள்வாரா இல்லையா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.