கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதிக்கு எதிராக, ஆதி தமிழர் மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கடந்த மே மாதம் ஆர்எஸ் பாரதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். முதலமைச்சர், தமிழ்நாடு அமைச்சர்களுக்கு எதிராக புகார் அளித்துவருவதால், அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் தன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஆர்எஸ் பாரதி குறிப்பிட்டிருந்தார். அரசியல் உள்நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டுள்ளதால், வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றுக் கேட்டுக்கொண்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க...ஜெ. பிறந்த நாளான பிப்.24இல் அதிமுகவில் விருப்பமனு விநியோகம்!