ஒப்பந்த காலம் முடியும் முன்னர் ஒப்பந்தத்தை ரத்து செய்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உத்தரவுக்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் இருந்து பெறப்படும் பாலை நாடு முழுவதும் மொத்தமாக விற்பதற்கும், வாங்குவதற்கும் ஏதுவாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம், இந்திய தேசியப் பால் கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்பு, இணைய வழி ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டது.
இம்மாதம் 12ஆம் தேதி நடத்தப்பட்ட இந்த ஒப்பந்தப் புள்ளி கோரலில், ஆற்காடு பால் விநியோகஸ்தர்கள் நிறுவனம், திருவண்ணாமலை, திருச்சி, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பால் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றது. இந்த ஒப்பந்தம், நடப்பு ஆண்டு நவம்பர் 15 முதல் 29ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வெளிநாடுக்கு தப்பியோடிய நித்தியானந்தா - இறுக்கும் காவல் பிடி.....
இதன்படி, ஆற்காடு பால் விநியோகஸ்தர்கள் பாலை வழங்கி வந்த நிலையில், நவம்பர் 23ஆம் தேதி முதல் பால் கொள்முதலுக்கான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படுவதாகத் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் தரப்பில் திடீரென அறிவிப்பு வெளியானது.
இதனால், ஒப்பந்த காலம் முடியும் முன்னதாக ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டது சட்ட விரோதம் என்றும், இந்த ஒப்பந்தத்தைப் பெற மூன்று கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செலவிட்ட நிலையில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருப்பது தங்களுக்கு இழப்பை ஏற்படுத்தியிருப்பதால், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஆற்காடு பால் விநியோகஸ்தர்கள் நிறுவனத்தின் உரிமையாளர் ரேவதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து ஆணையிட்டதோடு, இதுதொடர்பாக நவம்பர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கைத் தள்ளிவைத்தார்.