சென்னை: இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசித்து வரும் சென்னை ஐஐடியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் ஓர் அமைப்பாய் இணைந்து, இந்தியாவில் கரோனா தடுப்பு முயற்சிகளுக்கு 20 லட்சம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 14 கோடியே 56 லட்சத்து 57ஆயிரம் ஆகும்.
சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களின் இந்த நன்கொடையினைக் கொண்டு, சென்னை ஐஐடி இயக்குநரும், பேராசிரியருமான பாஸ்கர் ராமமூர்த்தி, தலா 10 லிட்டர் கொள்ளளவு உடைய 200 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
புலம்பெயர்ந்தோரின் கடமை
சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களின் இந்த முயற்சிகளைப் பற்றி, அமெரிக்காவின் சிலிக்கான் வேலியை மையாகக்கொண்ட ராக்கெட்ஷிப் வி.சியின் பங்குதாரரும், ஐஐடியின் முன்னாள் மாணவருமான ஆனந்த் ராஜாராமன் கூறுகையில்,"இந்த இக்கட்டான நேரத்தில் நம் நாட்டிற்காக ஒன்றிணைந்து உதவுவது புலம்பெயர்ந்தோரின் கடமையாகும்.
சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் வலையமைப்பு சார்பில், தமிழ்நாடு முழுமைக்கும் மருத்துவ உபகரணங்களை வழங்கி, ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற நிதி திரட்டியதற்கு நன்றியும் பெருமிதமும் கொள்கிறேன்"என்றார்.