சென்னை: பட்டாபிராம் முல்லை நகரில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் நேற்றிரவு(ஜூன்.16) பூஜை முடிந்து 9 மணிக்கு நடையை மூடிவிட்டு, கோயில் பூசாரி சக்தி மாரியப்பன் சென்றார். இந்நிலையில் இன்று(ஜூன்.17) காலை கோயில் கதவு திறந்து இருப்பதாக அவ்வழியே சென்றவர்கள் சக்தி மாரியப்பனுக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் கேட்டு உடனடியாக கோயிலுக்கு வந்து பார்த்தபோது கோயிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் உள்ளே சென்று பார்த்தபோது கோயிலிலிருந்த முருகன் சிலை, வள்ளி சிலை, தெய்வானை சிலை, முத்து மாரியம்மன் சிலை என 4 ஐம்பொன் சிலைகளும், 5 சவரன் தங்க நகைகளும் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து மாரியப்பன் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கிடையில் இக்கோயிலின் பக்கத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா ஆலயத்திலும் மூன்று ஐம்பொன் சுவாமி சிலைகள் திருடு போயுள்ளன. இதையடுத்து பட்டாபிராம் காவல்துறையினர் இரவு ரோந்துப்பணியில் அந்தப் பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடினர்.
அப்போது, பட்டாபிராம் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத, 3 நபர்கள் சாக்கு பையினை கீழே போட்டுவிட்டு ஓடி உள்ளனர். உடனடியாக சாக்கு பையை சோதனை செய்தபோது, மேற்கண்ட திருடுபோன 7 ஐம்பொன் சிலைகள் அங்கு இருந்தது தெரியவந்தது.
இதனை பட்டாபிராம் காவல்துறையினர் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா உதவியுடன் அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கொடுங்கையூர் விசாரணை கைதி மரண வழக்கு: சிபிசிஐடி விசாரணை அலுவலர் நியமனம்!