2018ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளால் நடத்தப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனார்.
இதில், அனுமதியின்றி போராட்டம் நடைபெற்றதாக, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளிலும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப் பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ”புலன் விசாரணை அதிகாரியே வழக்கில் புகார்தாராக இருப்பதால், இது விதிகளுக்கு புறம்பானது, சட்டவிரோதமானது. எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணைக்கு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.