சென்னை: பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகத் தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடைகள் மாநகராட்சி பொதுச் சுகாதாரத் துறையினரால் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டுவருகின்றன.
அவை புதுப்பேட்டை, பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுவருகின்றன. அவ்வாறு தெருக்களில் சுற்றித் திரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்படும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு ரூ.1,550/- விதிக்கப்படுகிறது.
அதனடிப்படையில், மாநகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் ராயபுரம் மண்டலம், திரு.வி.க. நகர் மண்டலம், அண்ணாநகர் மண்டலம், தேனாம்பேட்டை மண்டலம், கோடம்பாக்கம் மண்டலங்களிலிருந்து 19 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாடுகள் மாநகராட்சியின் புதுப்பேட்டையில் உள்ள தொழுவத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. எனவே மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளைப் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகத் தெருக்களில் சுற்றித்திரிய விடாமல் முறையாகப் பராமரித்துக் கொள்ள வேண்டுமெனவும், மீறினால் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நகைகள் ஜாக்கிரதை: தமிழ்நாடு காவல்துறையின் விழிப்புணர்வு வீடியோ!