சென்னை ராயப்பேட்டையில் பார் வசதியுடன் உள்ள தனியார் விடுதியில் பாலியல் தொழில் மற்றும் பெண்களை வைத்து அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் 20-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் அங்கு சட்டவிரோதமாக ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்ததது எனக்கூறப்படுகிறது.
பின்னர் விடுதி உரிமையாளர் மற்றும் நிர்வாகத்தினர் சிலரை காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்துச்சென்று, வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர் விடுதியில் நடனமாடியதாக கூறப்பட்ட 30-க்கும் மேற்பட்ட பெண்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, 5க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே இது தொடர்பாக அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை விடுதியிலிருந்து மது அருந்திவிட்டு வந்த இரு நபர்கள் ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் ஊடகவியலாளர்களுக்கும், அந்த நபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து காரில் தப்ப முயன்ற அந்த இரு நபர்களை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அண்ணா சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ஊடகவியலாளர்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில், அவர்களைக்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண் காவலருக்கு கத்தி குத்து... பகிரங்க வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி