டெல்லி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, சசிகலா அணிக்கு இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு, டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக டிடிவி தினகரனிடமிருந்து பணம் பெற்றதாக, இடைத்தரகர் சுகேஷ் என்ற சந்திரசேகரை கடந்த 2017-ம் ஆண்டு நட்சத்திர ஹோட்டலில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் டிடிவி தினகரன் ஜாமீன் பெற்றதால் வெளியே உள்ளார்.
இந்தப் பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சுகேஷிடம் அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில், டிடிவி தினகரன் முன்பணமாக 2 கோடி ரூபாய் கொடுத்ததாகத் தெரிவித்தார்.
சுகேஷின் இந்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி, கடந்த 12-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் நேரில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், வரும் 22-ம் தேதி மீண்டும் ஆஜராக டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அவ்வாறு தனக்கு எந்தவொரு சம்மனும் கைக்கு வந்துசேரவில்லை என டிடிவி தினகரன் பொதுவெளியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதலில் எடப்பாடியை கண்டியுங்கள்; ஓபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு அறிவுரை