அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனோ பெருந்தொற்று நோய் பாதிப்பில் தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாமிடத்தில் இருப்பது கவலையளிக்கிறது. இதனால் நாம் அனைவரும் இணைந்து முழு வீச்சில் கரோனாவை எதிர்த்துப் போரிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதில் அடுத்த இரண்டு வாரங்கள் இன்னும் சவால் நிறைந்ததாக இருக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மக்களை முழுமையாகக் காப்பாற்ற, தேவைப்பட்டால் ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகு மேலும் ஓரிரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கலாம்.
ஆனால் அப்படி அமல்படுத்துவதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையிலும், மக்களின் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளையும் சரியான திட்டமிடுதலோடு செய்வதிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை நிகழ்ந்திருக்கிற கரோனா மரணங்கள் மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளன. சிகிச்சையில் உடல்நலம் தேறி வந்தவர்கள் திடீரென உயிரிழந்திருப்பது சரியான நேரத்தில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியத்தையே உணர்த்துகின்றன.
இத்தகைய மரணங்களிலிருந்து பாடம் கற்க வேண்டியதும் கட்டாயமாகிறது. மேலும் சென்னை போன்ற இடங்களில் இப்போது வெறுமனே வீடு வீடாகச் சென்று கரோனா பாதிப்பு இருக்கிறதா என்று கேட்டுவிட்டு கையெழுத்து வாங்குவதற்குப் பதிலாக, கரோனா பாதிப்பை அரை மணி நேரத்தில் கண்டறியும் உபகரணம் வந்த பிறகு இந்த ஆய்வினை மேற்கொண்டால் சந்தேகப்படுபவரை அதே இடத்தில் சோதிக்க முடியும்.
தொடக்கத்திலிருந்தே மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் நின்று பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு போதுமான கவச உடைகளும், பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை என்ற செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
![டிடிவி தினகரன் ட்வீட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-ttv-tweet-7209106_07042020141320_0704f_1586249000_930.jpg)
கரோனா யுத்தத்தில் போர் வீரர்களைப் போல மக்களைக் காப்பாற்றி வரும் அவர்களைக் கூடுதல் கவனம் செலுத்தி காத்திட வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதை மத்திய, மாநில அரசுகள் மறந்திடக்கூடாது. பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திற்கு இணையாக ஊரடங்கினால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும். 10 நாள்களைக் கடப்பதற்குள்ளாகவே அவர்கள் படாத பாடுபட்டு வருகிறார்கள்.
அரசு அறிவித்த ரூ.1000 உதவித்தொகை இன்னும் முழுமையாகச் சென்றடையாத நிலையில், ஊரடங்கை நீட்டிக்கும்போது குறைந்தபட்சம் அவர்களுக்கு உணவு கிடைப்பதற்கான ஏற்பாட்டினை திட்டமிட்டு செய்ய வேண்டும். இந்த நேரத்தில் நடமாடும் அம்மா உணவகங்களைச் செயல்படுத்துவது மக்களுக்குப் பேருதவியாக இருக்கும். இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துவதற்கு அரசு எந்திரத்தின் ஒருங்கிணைந்த செயல்பாடு மிக முக்கியமானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ”தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துவிட்டு, ஊரடங்கை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிப்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இன்றைக்குள் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் விநியோகம்- அமைச்சர் ஓ.எஸ். மணியன்