பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் நேற்று தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் . அந்த வீடியோவில் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்தது யார் என விவாதிக்க தயாரா என திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு அறைகூவல் விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேற்றிரவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் அன்புமணி ராமதாஸுடன் விவாதிக்க நான் தயார் என பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், செந்தில்குமார் இன்று ஆறு நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அந்த வீடியோவில் அவர், “அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு வணக்கம். நான் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார். ராமதாஸ் ஒரு அறிக்கையும், அன்புமணி ராமதாஸ் ஒரு காணொலி காட்சியும் வெளியிட்டிருக்கிறார்கள். விவாதிக்க தயாரா என ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள்.
நான் உங்களிடம் விவாதிக்க தயாராக இருக்கிறேன். நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். திமுக தலைவர் ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கிறீர்கள். குடியுரிமை திருத்த மசோதாவில் 125 வாக்குகள் ஆதரவாக விழுந்தன . இதில் 12 வாக்குகள் அதிமுக மக்களவை உறுப்பினா்களின் வாக்குகள், பாமகவின் ஒரு வாக்கு என 13 வாக்குகள் குடியுரிமை மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்ததால் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது .
அதிமுக மற்றும் பாமக எதிர்த்து வாக்களித்திருந்தால் 113 வாக்குகள் பெற்று இந்த மசோதா தோல்வியைத் தழுவிஇருக்கும். இந்தியா முழுவதும் நடக்கின்ற போராட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டில் நடக்கின்ற போராட்டங்கள் நடைபெற நீங்கள் அளித்த வாக்குகள்தான் காரணம். கொள்கை என்று சொல்லிவிட்டு கூட்டணி தர்மத்திற்காக கொள்கையை விட்டுவிட்டீர்கள். குளிர்கால கூட்டத்தில் 31 மசோதாக்களில் நீங்கள் எத்தனை கூட்டங்களில் பங்கேற்று பேசினீர்கள். மக்களவையில் பங்கேற்று வாக்கு மட்டும் செலுத்தி இருக்கிறீர்கள். இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை அளிக்கவேண்டும் என மக்களவையில் பேசினீர்களா இஸ்லாமிய மக்களுக்கு ஏதாவது பேசினீா்களா ? திமுக இஸ்லாமிய சமுதாய மக்கள் சிறுபான்மையின மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது .
இந்த கூட்டத்தொடரில் அன்புமணி ராமதாஸ் பூஜ்ஜிய நேரத்தில் இரண்டு நிமிடம் மட்டுமே பேசி இருக்கிறார். மழைக்காலக் கூட்டத்தொடரில் பதவியேற்றது மட்டும்தான். அதன் பிறகு ஒரு நாள்கூட மாநிலங்களவை விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. பாமக தேர்தல் நேரத்தில் வைத்து செயல்திட்டத்தில் நீட் தேர்வு குறித்து நீங்கள் உங்கள் கூட்டணி கட்சியினரிடம் பேசினீர்களா?
7 பேர் விடுதலை குறித்து உங்கள் கூட்டணியிடம் நீங்கள் வலியுறுத்தினீர்களா ? அதுபற்றிய நிலை என்ன ? தமிழ்நாடு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினர் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துவருகின்றனர்” என பேசியிருக்கிறார்.