சென்னை: கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் அப்போதைய மாநில தலைவர் திருநாவுக்கரசு, தமுமுக கட்சியைச் சேர்ந்த காதர் மைதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றதையடுத்து, சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் சிறப்பு நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே இந்த வழக்கை தன்னிச்சையாக விசாரித்து வரும் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரதசக்ரவர்த்தி முதன்மை அமர்வு, கடந்த முறை விசாரணையின்போது, எதன் அடிப்படையில் இந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டது என்று காவல்துறைக்கு கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த வழக்கு இன்று (மார்ச் 7) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவே தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இந்த போராட்டம் மக்களுக்கான போராட்டம், விவசாயிகளுக்கான போராட்டம் என்பதனால் அந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இதற்கு தலைமை நீதிபதி அமர்வு திருப்தி தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சென்னை கால்வாயில் குப்பை கொட்டினால் நோட்டீஸ்- துணை மேயர் அதிரடி!