இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக, சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு முரணான தகவல்கள் பொதுவெளியில் பரவி வந்த நிலையில், அதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் முத்தரசன் அளித்துள்ள விளக்கத்தில், ' இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வருகிறார்.
நோய்த்தொற்று மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக, ஏற்பட்ட பாதிப்பிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறப்பு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையிலும் தா.பாண்டியன் உடல் நிலையில் மாற்றம் காணாத நிலை நீடிக்கிறது.
இச்செய்தி அறிந்த கட்சியின் அகில இந்தியச் செயலாளர் டி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் தமீம் முன் அன்சாரி, கருணாஸ், தனியரசு மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மருத்துவமனைக்கு நேரில் வந்து, அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்களிடமும் தா.பாண்டியன் குடும்பத்தாரிடமும் விசாரித்துச் சென்றனர்’ எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு - 19 பேர் காயம்!