சென்னை: காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியைத் தவறாகச் சித்திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவந்த பாஜக பிரமுகரைக் கைதுசெய்ய காவல் ஆணையர் அலுவலகத்தில், காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் புகாரளித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியின் பிறப்பு குறித்தும், இந்தியக் குடியுரிமை குறித்தும் அவதூறு பரப்பும் வகையில், இழிவான கருத்துகளைப் பதிவிட்டது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்தார்.
மேலும், எஸ்.ஆர். சேகர் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் குறித்து தவறான கருத்துகளைப் பதிவிட்டுவருவதால் அவரது ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்தார்.
தனது கட்சியில் பிரபலமடைவதற்காக எஸ்.ஆர். சேகர் தொடர்ந்து இதுபோன்ற அவதூறு கருத்துகளைப் பரப்பிவருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தும் எனவும் தெரிவித்தார்.