சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் பிறந்தநாள் இன்று. வெறும் 11 மாதங்கள் மட்டுமே இந்திய பிரதமராக இருந்த இவர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு வித்திட்டவர்.
தமிழர்களின் நண்பர் வி.பி. சிங்
ராஜவம்சத்தில் பிறந்தாலும் அவரின் சிந்தனைகள் யாவும் ஏழை மக்களின் வாழ்க்கை குறித்தே இருந்தது. அதற்கு உதாரணமாக, ஆச்சார்யா வினோபாபாவேயின் பூமிதான இயக்கத்தில் பங்கேற்ற அவர், தனது நிலங்களை தானம் அளித்ததைக் கூறலாம்.
![சமூக நீதிக் காவலர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12257239_op.jpg)
சென்னையிலுள்ள வெளிநாட்டு விமான தளத்துக்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமான தளத்துக்கு காமராஜர் பெயரும் சூட்ட வேண்டும் என்ற பலரின் வேண்டுகோளை நிறைவேற்றியவர் வி.பி. சிங். காவிரி நடுவர் மன்றம் அமைத்திட உத்தரவிட்டதும் இவரே.
சமூகநீதிக் காவலர்
இவரின் பிறந்தநாளை நினைவுகூர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அந்தப் பதிவில், "சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டோர், வரலாற்று வலியிலிருந்து ஆறுதல் பெற மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி இடஒதுக்கீட்டை உயர்த்திப் பிடித்த 'சமூகநீதிக் காவலர்' வி.பி. சிங் பிறந்தநாள் இன்று!
![முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12257239_sd.jpg)
சமூகநீதி அரசியலில் வெளிச்சம் பாய்ச்சிய அவரை நினைவுகூர்வோம்!" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இடஒதுக்கீடு நம் உரிமை என்பதை வலியுறுத்தும்விதமாக #ReservationIsOurRight என்னும் ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வடக்கிலிருந்து ஒரு சூரியன்... மண்டல் நாயகன் வி.பி. சிங்