சென்னை: சின்னசேலம் பள்ளி மாணவியின் மர்ம மரணம் வழக்கை சென்னை உயர் நீதிமன்றமானது தானாக முன்வந்து விசாரிக்க அனைத்து இந்திய தனியார் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் நிறுவனர் கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர், சின்னசேலம் சக்தி இன்டர்நேஷனல் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி ஜூலை 12 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தங்கள் கவனத்தை ஈர்த்திருக்கும் என்று நம்புகிறோம். இவ்விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை ஏற்கத்தக்க வகையில் இல்லை எனக் கூறி உடலை வாங்க மறுத்த உறவினர்கள், நேற்றும் (ஜூலை 16) நான்காவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
![உயர் நீதிமன்றம் விசாரிக்க கோரிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-08-aipceu-cinnaselam-school-student-death-script-7204807_17072022151448_1707f_1658051088_640.jpeg)
மாணவி ஸ்ரீமதியும், இதற்கு முன்னர் வேறு ஆறு குழைந்தைகளும் மர்மமான முறையில் இறந்துள்ளதாக கூறப்படும், இந்த தனியார் பள்ளி நிர்வாகிகளை இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை. காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்ததாக தெரியவில்லை. இதன் காரணமாகவே கடந்த ஐந்து நாட்களாக பெற்றோர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (ஜூலை 17) அந்த போராட்டம் கலவரம், தீவைப்பு, துப்பாக்கி சூடு என்று மாநிலத்தின் தலைப்பு செய்தியாகியுள்ளது.
ஆயினும் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில், குற்றசாட்டுக்குள்ளான தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு கேடயமாக விளங்குவதுபோல காவல்துறை DGP சைலேந்திர பாபுவின் பேச்சு அமைத்துள்ளது.
பெற்றோருக்கும், இறந்த மாணவர்களுக்கும் சார்பாக பேசாமல், பள்ளி நிர்வாகத்தினரை காப்பதிலேயே DGPயின் நோக்கம் உள்ளதாக அவர் பேச்சு உணர்த்துகிறது. ஆதலால் சென்னை உயர் நீதிமன்றமானது தானாக முன்வந்து இந்த வழக்கை suomotto-வாக எடுத்து விசாரித்து, உடனடியாக CBI புலனாய்வுக்கு உத்தரவிட வேண்டும் என வேண்டுகிறோம்.
தொடர்ந்து இப்பள்ளியில் இறந்த குழைந்தைகள் அனைவரின் வழக்குகளையும் நீதிமன்றம் மேற்பார்வை செய்யவும் வேண்டுகிறோம் என கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கலவரமான கள்ளக்குறிச்சி: கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை - டிஜிபி சைலேந்திரபாபு