புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று (ஜன.23) சட்டப்பேரவை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், "அண்டை மாநில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி வருகின்றனர்.
ஆனால், புதுச்சேரி மாணவர்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியுள்ள நிலையில் புதுச்சேரியில்கூட இடம் கிடைக்க முடியாமல் அவதிக்குள்ளாகிறார்கள். இதற்கு மத்திய அரசும், கிரண்பேடியும்தான் பொறுப்பேற்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ படிப்பில் 10 விழுக்காடு உள் ஒதுக்கீடு கொடுக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கி மத்திய அரசும் கிரண்பேடியும் திட்டமிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு துரோகம் செய்துள்ளனர்.
மேலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் நேரம் கேட்டுக் இருந்த நிலையில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் உள்ளதால் பிப்ரவரி மாதம் நேரம் ஒதுக்கித் தருவதாக குடியரசுத் தலைவர் அலுவலகம் சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி மின் துறை தனியார் மயமாக்கப்படுவதை நிறுத்தி வைக்க வேண்டும்.