சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், சவூதி அரேபியாவில் சொந்தமாக டிரேடிங் பிசினஸ் செய்து வந்துள்ளார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சென்னைக்கு வந்தார்.
நண்பர் மூலமாக போரூரைச் சேர்ந்த சுனிதா என்பவர் சீனிவாசனுக்கு அறிமுகமாகியுள்ளார். சீனிவாசனிடம் பணம் இருப்பதையும், முழு ஊரடங்கால் மீண்டும் வெளிநாடு செல்ல முடியாத சூழலையும், அறிந்த சுனிதா அவரிடம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார்.
தானும், தனது குடும்ப நண்பர்களும் இணைந்து Sun Boutique Pvt Ltd மற்றும் Koyambedu Finance Association Pvt Ltd என்ற பெயர்களில் ட்ரேடிங் நிறுவனங்களை நடத்தி வருவதாக சீனிவாசனிடம் கூறி, நம்ப வைத்துள்ளார்.
மேலும் தங்களது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், ஓராண்டிற்குள் முதலீடு செய்த தொகையை 2 மடங்கு லாபத்துடன் தருவதாகவும், நிறுவனத்தில் இயக்குநராக சேர்த்துக் கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி, ரூ.12.49 கோடி ரொக்கம் மற்றும் 36 சவரன் தங்க நகைகளையும் பெற்றுக் கொண்டார்.
ஆனால், கூறியதுபோல் எந்தவித லாபத்தையும் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதையடுத்து, போலி நிறுவனங்கள் மூலம் தன்னிடமிருந்து பணம் பறித்த சுனிதா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சீனிவாசன் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த சுனிதாவை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், கொலை முயற்சி வழக்கில் அந்தமானில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், செங்கல்பட்டு ரவுடியுமான ரஞ்சித் என்பவரின் மனைவிதான் சுனிதா என்பது தெரியவந்தது.
குறிப்பாக சுனிதாவிடம் பணத்தைக் கேட்க சீனிவாசன் முயன்றபோது, தனது கணவர் ரஞ்சித்தை வைத்து மிரட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடி வழக்கில் காங்கிரஸ் கட்சி நிர்வாகியான ரஞ்சித் இரண்டாவது குற்றவாளியாக சேர்த்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கொலை முயற்சி வழக்கில் அந்தமானில் கைது செய்யப்பட்ட ரஞ்சித்தை, மோசடி வழக்கிலும் கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ரவுடி கணவனும், மோசடி செய்த மனைவியும் வேறு ஏதெனும் மோசடிகளை செய்துள்ளார்களா என கண்டுபிடிப்பதற்கு, காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விசாரணைக்கு பிறகு சென்னை எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுனிதாவை ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க : ஓட்டிப் பார்ப்பதாக கூறி புல்லட் திருட்டு- காதல் ஜோடி கைது