சென்னை மெட்ரோ ரயில்வேயில் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, நிரந்தர பணியாளர்களை விட கூடுதல் ஊதியம் கொடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கம் துவக்கியதாக காரணம் காட்டி 8 நிரந்தர பணியாளர்களை திடீர் பணிநீக்கம் செய்து ஏப்ரல் 29ம் தேதி அன்று மதியம் உத்தரவிட்டது மெட்ரோ நிர்வாகம்.
அதைத் தொடர்ந்து ஏப்ரல் 29ம் தேதி மாலை முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தது மெட்ரோ பணியாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டதால், மெட்ரோ ரயில்கள் சரிவர இயங்கவில்லை. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில் மெட்ரோ ஊழியர் சங்கம், மெட்ரோ நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையம் ஆகியவை இணைந்து நேற்று (ஏப்ரல் 30) பாரிமுனையில் உள்ள தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் இன்று தற்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறுவதாக மெட்ரோ ரயில்வேயில் ஒப்பந்த பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மெட்ரோ ரயில் பணியாளர்கள் தரப்பில் கூறியதாவது, "8 நிரந்தர பணியாளர்களை திடீர் பணிநீக்கம் செய்ததை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தினோம். 8 பேரின் வேலை நீக்கமே எங்களுக்கு முக்கிய கோரிக்கையாக இருந்தது. அதனால் பணியாளர் சங்கம் அறிவுறுத்தியப் படி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நிர்வாகத்திடம் மேல்முறையீடு செய்யபோகிறார்கள். தங்கள் கோரிக்கை பரசீலிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர். இதனால் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம்" என தெரிவித்துள்ளனர்.