சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்படும் பொருட்களான உணவுப்பொருட்களைக் கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாக்கோல் தட்டுகள், நெகிழி பூசப்பட்ட காகித குவளைகள், நெகிழிக் குவளைகள், நீர் நிரப்பப் பயன்படும் பைகள்,பொட்டலங்கள், நெகிழி தூக்கு பைகள், நெகிழிக் கொடிகள், பிளாஸ்டிக் விரிப்புகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள், நெகிழி தேநீர் குவளைகள், நெகிழி உறிஞ்சு குழல்கள், நெகிழி பூசப்பட்ட பைகள், நெய்யாத நெகிழி பைகள் போன்ற 14 வகையான நெகிழி பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும், இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி,உலோகத்தாலான குவளைகள், மூங்கில், மரப்பொருட்கள், காகித குழல்கள், துணி/காகிதம்/சணல் பைகள், காகித/துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள் மற்றும் மண் குவளைகள் போன்ற 12 வகையான பொருட்களைப் பயன்படுத்தவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நெகிழி பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக “மீண்டும் மஞ்சப்பை” என்ற விழிப்புணர்வு இயக்கத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் டிசம்பர் 23 ந் தேதி தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்படும் 14 வகையான நெகிழி பொருட்கள் தடைசெய்யப்பட்டு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களால் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டும், பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.