சென்னை: எழும்பூரில் பெருநகர மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக கார்பெவாக்ஸ் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக கார்பெவாக்ஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னரே மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில் இந்த கார்பெவாக்ஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. வருகிற 21ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 50,000 சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகளில் பூஸ்டர் செலுத்தப்பட இருக்கிறோம்.
சேர்க்கை முறையிலான கருத்தரிப்பு மருத்துவமனைகளில் 21 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் அனுமதி உடன் மட்டுமே கருமுட்டை எடுக்கப்பட வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அரசின் சார்பில் இரண்டு அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைகள் அடிப்படையில் கருத்தரிப்பு மருத்துவ வசதிகள் செய்யப்பட இருக்கிறது. தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.
அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட அம்மா கிளினிக் போல் இல்லாமல் தமிழ்நாட்டில் 709 மருத்துவமனைகளை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையினைப் பொறுத்தவரை வார்டுக்கு ஒரு ஆர்.எஸ் மருத்துவமனை என 200 வார்டுகளில் 200 அரசு மருத்துவமனைகளும் மற்றும் தமிழ்நாட்டின் பிற நகர் சார்ந்த பகுதிகள், மக்கள் அதிகம் பயன்படக்கூடிய பகுதிகளில் பிற மருத்துவமனைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ஐம்பது விழுக்காடு மானிய விலையில் பாரம்பரிய விதை நெல் விநியோகம்