சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில், பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், பிரதமர், ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி ஆகியோரின் படங்களை மார்ஃபிங் செய்து யூ டியூப் சேனல் ஒன்று வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக வழக்கறிஞர் பிரிவின் மாநிலத் தலைவர் பால் கனகராஜ், ”யாருடைய துண்டுதலின்பேரில் அந்த யூடியூப் சேனல் செயல்படுகிறது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். 'பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்' திட்டத்தினை கொச்சைப்படுத்தும் விதமாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
பாஜகவின் சிறப்பான ஆட்சியை சீர்குலைக்கும் வகையிலும், மக்கள் மனதில், பாஜக, அதன் தலைவர் குறித்து தவறான எண்ணத்தை விதைக்கும் வகையிலும், வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் நிர்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த யூடியூப் சேனலை முடக்க வேண்டும்” என்றார்.
அத்துடன், இதுதொடர்பாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜக வருமானம் 50% அதிகரிப்பு, உங்கள் வருவாய்? ராகுல் காந்தி