சென்னை: வங்கதேசத்தில் பிறந்து வளர்ந்த சுஷீல் சர்கார் என்பவர், அந்நாட்டின் சிறுபான்மையின இந்து மதத்தைத் சேர்ந்தவர் என்பதால், மத ரீதியான துன்புறுத்தல் இருக்கும் என்ற அச்சத்தில் 1996ஆம் ஆண்டில் 13 வயது சிறுவனாக குடும்பத்துடன் இந்தியா வந்து கொல்கத்தாவில் குடியேறி 25 ஆண்டுகளாக வசித்துவருகிறார்.
இந்திய குடிமகனாக பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டுகளை பெற்ற அவர், வேலை வாய்ப்புக்காக சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் இருந்து கடந்த மார்ச் மாதம் இந்தியா திரும்பிய அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்த சென்னை விமான நிலைய குடியேற்ற துறை அலுவலர்கள், அதில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதை குறிப்பிடாமல் போலி முகவரி மூலம் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகக் கூறி கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அவர் பொதுவெளியில் நடமாடுவதை தடுக்கும் வகையில், திருச்சியில் உள்ள அயல்நாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து, தனது கணவரை விடுவிக்கக்கோரி ரூமா சர்கார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு எம். நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர். விவேகானந்தன், தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ. தாமோதரன் ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன், இந்து மதம் சிறுபான்மையாக உள்ள ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வந்தவர்களை குடியுரிமைச் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் ஆகியவை அனுமதிப்பதாகவும், அதன்படி சுஷீல் சர்க்கார் முறையாக பாஸ்போர்ட் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியக் குடியுரிமை பெற்ற சுஷீல் சர்காரை, அயல்நாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைத்தது தவறு எனக் கூறி, தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்ததுடன் சுஷீல் சர்காரை விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அவதூறு வழக்கு: ரத்துசெய்ய கோரும் ஓபிஎஸ்-இபிஎஸ்