சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத் தலைவர் செ. பீட்டர் அந்தோணிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அதில், 'தமிழ்நாடெங்கும் கரோனா தொற்று அதிதீவிரமாகப் பரவிவரும் வேளையில், தமிழ்நாடு தலைமைச் செயலகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கான அரசு அலுவலகங்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கி வருகிறது. இடநெருக்கடி அதிகமாக உள்ள தலைமைச் செயலகத்தில் பணியாளர்களுக்கிடையே சமூக இடைவெளியைப் பின்பற்றுவது என்பது இயலாத காரியமாக உள்ளது.
மேலும், தலைமைச் செயலகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலையில், அவ்வெண்ணிக்கை 400-ஐ தாண்டிவிட்டது. கடந்த வாரத்தில் மட்டும் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஐந்து பணியாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இதில் வேதனைக்குரியது என்னவென்றால், தீவிர தொற்றால் பாதிப்படைந்த தலைமைச் செயலகப் பணியாளர்கள் பலர் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் நாள்தோறும் அல்லல் படுகின்றனர். எனவே, கரோனா தொற்று அதி தீவிரமாகப் பரவிவரும் இக்காலகட்டத்தில் பணியாளர்களின் உயிரையும், உறவுகளையும் காக்கும் விதமாகக் கீழ்க்கண்ட அறிவிப்புகளை உடனடியாக வெளியிடும்படி தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
- நாடெங்கும் கரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலத்திலிருந்தே முன்களப் பணியாளர்களுக்கு இணையாகத் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியாளர்களும் தொடர்ந்து அரசுப் பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டு வருவதால் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியாளர்களை “முன்களப் பணியாளர்கள்” என அறிவிக்க வேண்டும்.
- கரோனா தொற்று பரவல் விகிதம் குறையும் வரை, தலைமைச் செயலகம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க வேண்டும் என்பதற்கு மாற்றாகத் தலைமைச் செயலகத்தில் உள்ள அத்தியாவசியத் துறைகளிலுள்ள (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நிதித்துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) போன்ற முக்கியமான பிரிவுகளில் மட்டும் சுழற்சி அடிப்படையில் குறைந்த அளவில் பணியாளர்களுடன் (Including officers) மட்டும் இயங்க ஆணையிட வேண்டும்.
- தலைமைச் செயலகத்தில் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் வாரந்தோறும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து துறைகளிலும் மருந்து தெளிக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும். மேலும், நோய்த் தொற்று குறையும் வரையில் அத்தியாவசியம் தவிர்த்து வெளியாட்கள் தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.