இந்தியா முழுவதும் உள்ள 10 தனியார் பல்கலைக்கழகம் மற்றும் 10 அரசு பல்கலைக் கழகங்களுக்கு சீர்மிகு கல்வி நிலையங்கள் என்ற சிறப்பை வழங்கி பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்தது. இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி, வேலூரில் உள்ள விஐடி ஆகியவை தமிழ்நாட்டில் இருந்து இடம் பெற்றுள்ளன. இதனால் சர்வதேச பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் ஆராய்ச்சி மூலம் இடம்பெற முடியும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை கருதுகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்து கிடைத்தால் ரூ.1000 கோடி நிதி உதவியும் கிடைக்கும். ஆனால் தமிழகத்தில் உள்ள இட ஒதுக்கீடு பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து முடிவெடுப்பதற்காக அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், தங்கமணி, கே.பி.அன்பழகன்,சி,வி.சண்முகம் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் இரண்டாவது கூட்டம், ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்து கிடைத்தால் ஏற்படும் சாதகங்கள், பாதகங்கள் குறித்து விளக்கப்பட்டன. அப்போது அரசு பல சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டும் என பல்கலைக்கழத்திற்கு உத்தரவிட்டது.
இச்சூழலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா, முன்னாள் பதிவாளர் கணேசன் ஆகியோர் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனை சந்தித்து பேசினர். அப்போது அரசின் பல்வேறு சந்தேகத்திற்கு விளக்கம் அளித்தனர்.
இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது, பல்கலைக்கழக மானியக்குழுவால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கான சீர்மிகு அந்தஸ்து குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் முக்கியமாக அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் ஏற்கனவே இருந்த நிலை தொடரவேண்டும்.
மேலும், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நீடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு வலியுறுத்தப்படும். பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்புகளை மாநில அரசே நடத்த வேண்டும். எந்த வித இளநிலை பொறியியல் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வும் நடத்தக்கூடாது . தற்போதைய நிலைப்படி 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை தொடர வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு நிபந்தனைகள் விதிக்கும்.
இதனை ஏற்றுக்கொண்டு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தால் மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தின் சீர்மிகு அந்தஸ்து ஏற்போம். இல்லையேல் சீர்மிகு அந்தஸ்தை ஏற்க மாட்டோம் எனத் தெரிவித்தார்.