சென்னை விமான நிலையத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “வங்கித் துறையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு வருகிறது. 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்பந்தம் முடிந்த நிலையில், நவம்பர் மாதம் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு கோரிக்கைகளுக்காக 30 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அதிகரித்து வரும் விலைவாசி, வேலை பளுவுக்கு தகுந்தவாறு ஊதியத்தை உயர்த்த கோரிக்கை வைத்தும் 12 விழுக்காடு மட்டுமே உயர்த்தப்படும் என்றனர். இதனால் போராட்டத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 27ஆம் தேதி டெல்லியில் தொழிலாளர் ஆணையர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முடிவு எடுக்கச் சொன்னார். ஆனால் அதிலும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை. மும்பையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, 15 விழுக்காடு வரை உயர்த்துவதாக கூறப்பட்டது. ஆனால், 20 விழுக்காடு வழங்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை. அரசு அலுவலர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை என்பது போல் வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு தினங்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “வங்கி ஊழியர்களின் சலுகைகள், பென்ஷன் போன்ற பிரச்னைகளிலும் நிர்வாகம் பிடிவாதமாக இருப்பதால் திட்டமிட்டபடி 31ஆம் தேதி, பிப்ரவரி 1ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்களும் இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதனால் வங்கி கிளைகள் முடங்கக் கூடிய நிலைமை ஏற்படும். இதற்கு அரசும் வங்கி நிர்வாகமும்தான் பொறுப்பு. நிர்வாகம் கோரிக்கையை ஏற்றால் போராட்டத்தைக் கைவிடத் தயாராக இருக்கிறோம். இரண்டு நாள் போராட்டத்திற்கு பின்பும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் மார்ச் மாதம் 11, 12, 13 ஆகிய மூன்று நாள்கள் போராட்டம் நடத்தப்படும். அதிலும் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: எம்எல்ஏ செந்தில் பாலாஜி வீடு, கடைகளில் போலீசார் திடீர் சோதனை