சென்னை திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் மீனா(44). இவருடைய மகள் தனலட்சுமிக்கு ஆறு மாத கைக்குழந்தையும், மூன்று வயது குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் மீனா, தனலட்சுமி ஆகிய இருவரும் குழந்தைகளுடன் சேர்த்து காவல் ஆணையர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள சிக்னல் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை கவனித்த வேப்பேரி காவல் துறையினர் இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியான வெங்கடேசன்-லட்சுமி ஆகிய இருவரும் சுமார் நான்கு ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். லட்சுமியுடன் மீனா நட்புறவில் இருந்ததால், அவரை நம்பி மீனா தனக்கு தெரிந்த நான்கு பேரையும் சீட்டில் சேர்த்துள்ளார். இதற்கிடையே ஜூலை மாதம் லட்சுமியின் கணவர் வெங்கடேசன் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்.
இதையடுத்து மீனாவை நம்பி ஏலச்சீட்டில் சேர்ந்த நான்கு பேரும் பணத்தை திருப்பிக் கேட்டதால், மீனா லட்சுமியிடம் பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால் லட்சுமி ஏலச்சீட்டு நடத்திய விஷயம் தனக்கு தெரியாது என கூறி நாடகமாடியுள்ளார். லட்சுமி பணம் தராமல் ஏமாற்றியதால் மீனாவை நம்பி சீட்டில் சேர்ந்த நான்கு பேரும் மீனாவுக்கு பணத்தைக் கேட்டு கடும் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மீனா தன் குடும்பத்தினருடன் வந்து காவல் ஆணையர் அலுவலகம் சிக்னல் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்ததாக தெரிய வந்துள்ளது. காவல் துறையினர் மீனாவிடம் புகார் மனுவை வாங்கிவிட்டு, மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தி மீனாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.