சென்னை மந்தைவெளி பெரிய பள்ளி தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் தமீம் அன்சாரி (40). இவர் கடந்த மாதம் 20ஆம் தேதி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது வீட்டில் வைத்திருந்த 24 லட்சம் ரூபாய் காணாமல்போனதாகவும், அதனைக் கண்டுபிடித்துத் தருமாறும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பட்டினப்பாக்கம் காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமது (38) பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து ரியாஸ் அகமதுவை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தொழிலதிபர் தமின் அன்சாரியின் மனைவி கஸ்னீமிற்கும் (35) ரியாசுக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் நெருங்கிப் பழகிவந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி கஸ்னீம் தனது மண உறவைத் தாண்டிய காதலன் ரியாஸை ராயப்பேட்டைக்கு வரவழைத்து 42 லட்ச ரூபாயைக் கொடுத்து, 'நான் கேட்கும்போது கொடுக்க வேண்டும்' எனக் கூறிவிட்டு சென்றதாக ரியாஸ் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவரிடமிருந்து 41 லட்ச ரூபாயை காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர். தொழிலதிபர் தமீம் அன்சாரி 24 லட்ச ரூபாய் காணவில்லை எனப் புகார் கொடுத்த நிலையில் ரியாசிடமிருந்து 42 லட்சம் ரூபாய் பறிமுதல்செய்துள்ளதால் அந்தப் பணம் ஹவாலா பணமா? மனைவியே பணத்தைத் திருடிகொடுத்து வைத்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தொழிலதிபரின் வீட்டில் 20 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை