தமிழ்நாட்டில் வேளாண் காலநிலை மண்டலங்களில் நிலப் பயன்பாட்டு மாற்றங்கள் குறித்த பகுப்பாய்வு மற்றும் தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் பசுமைத் தாவரங்களின் விழுக்காடு குறித்த செயற்கைக்கோள் படங்கள் அடிப்படையிலான விளக்காட்சிக் கூட்டம் வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் (முன்னர் மாநிலத் திட்டக் குழு) துணைத் தலைவர் சி. பொன்னையன் தலைமையில் எழிலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய சி. பொன்னையன், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கரூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பினைச் சட்டப்பூர்வமாக்க, தமிழ்நாடு அரசு ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் சட்டவல்லுநர்கள் குழு அமைத்து நடவடிக்கைகள் எடுத்துவருகின்றது. இதன்மூலம் மேற்கூறிய மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் (Hydro Carbon) போன்ற எந்தவொரு திட்டத்தையும் அறிமுகப்படுத்த அரசு அனுமதிக்காது.
செயற்கைக்கோள் புகைப்பட உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பசுமை ஆய்வின்படி, சென்னை பெருநகர பகுதியில் 12,293.26 ஹெக்டேர் (10.23%), மதுரை மாநகராட்சியில் 1305.79 ஹெக்டேர் (8.79%), கோயம்புத்தூர் மாநகராட்சியில் 4514.48 ஹெக்டேர் (17.54%), திருச்சி மாநகராட்சியில் 1826.53 ஹெக்டேர் (12.62%), சேலம் மாநகராட்சியில் 1629.73 ஹெக்டேர் (16.60%) பரப்பளவில் மரங்கள் உள்ளன.
கோயம்புத்தூர், சேலம், திருச்சி மாநகராட்சிகளில் உள்ள தென்னந்தோப்புகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால் இங்கு பசுமை அதிகமாகக் கணக்கிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அவர், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்த நாளையொட்டி ரூ.191.85 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் 71 லட்ச மரக்கன்றுகள் நடும் நடவடிக்கையை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்.
இந்தத் திட்டமானது தமிழ்நாட்டில் 2012ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. அதன்படி 2012ஆம் ஆண்டு 64 லட்ச மரக்கன்றுகள், 2013ஆம் ஆண்டு 65 லட்ச மரக்கன்றுகள், 2014இல் 66 லட்ச மரக்கன்றுகள், 2015இல் 67 லட்ச மரக்கன்றுகள், 2016இல் ஆண்டு 68 லட்ச மரக் கன்றுகள், 2017இல் 69 லட்ச மரக் கன்றுகள், 2018இல் 70 லட்ச மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.
இந்த மரக்கன்றுகள் வனப் பகுதிகள், அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகள், வளாகங்கள், அரசு வளாகங்கள், பூங்காக்கள், பெரிய குடியிருப்புப் பகுதிகள் மற்றும் மாநிலம் முழுவதும் சாலையோரங்களில் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன" எனத் தெரிவித்தார்.
அதில் 2011–12 முதல் 20–2021 வரை நிலப் பயன்பாடு, நீர் வாழ்வாதாரம், விவசாயம், சுற்றுச்சூழல், ஈரநிலம், பருவநிலை மாற்றம், நகரமயமாக்கல், வனம், கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரம் எனப் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 67 ஆராய்வுகள் விளக்கப்பட திட்டமிடப்பட்டன. அவற்றில் 42 ஆராய்வுகள் நிறைவடைந்துள்ளன. மேலும் 15 ஆராய்ச்சி ஆய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதையும் படிங்க: மரக் கன்று நட்டு, தேசிய பசுமை திட்டத்தை தொடக்கி வைத்த நாராயணசாமி!