சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் ஆறு போக்குவரத்துக்கழகங்களுக்கு 159 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்துகள் வழங்கும் விழா தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 500 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் சென்னை மாநகர போக்குவரத்திற்கு 100 மாநகர பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துகளும், நெல்லை, கோவை, சேலம், மதுரை, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய ஆறு கோட்டங்களுக்கு 250 புதிய பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 7 கோடி ரூபாய் செலவில் 137 வகையான உபகரணங்களை தமிழ்நாடு பேரிடர் மீட்பு படைக்கு முதலமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது தவிர உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்புதல் செய்யப்பட்ட 16 நிறுவனங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி திறந்து வைத்தார்.
முன்னதாக, தமிழ்நாடு அரச ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் ஐந்தாயிரம் புதிய பேருந்துகள் வாங்க அரசாணை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,001 கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரத்து 381 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.