தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால் கடந்த 28ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி கட்சித் தொடர்பான போஸ்டர், பேனர், பெயர் பலகைகள் உள்ளிட்டவற்றை வைத்த கட்சி பிரமுகர்கள் மீது தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், கண்காணிப்பு குழு அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
தேர்தலின் போது எந்தவித அசாம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க சென்னையில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கவும் காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இதுமட்டுமில்லாமல் குற்றப் பதிவேடு ரவுடிகளை கண்டறிந்து கைது செய்து சிறையிலும் அடைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி காலை வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 29 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், பணம், விலையுயர்ந்த பொருள்களை கொண்டு சென்றதாக 14 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவின் சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உரிமம் பெற்ற 1622 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 1104 ரவுடிகளிடம் பிராமண பத்திரத்தில் 6 மாதம் எந்த விதமான குற்றங்களிலும் ஈடுபடாமல் இருக்க கையெழுத்து பெற்றுள்ளதாகவும் சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 556 நபர்களுக்கு கரோனா!