இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இ-சிகரெட்டிற்குத் தடை விதிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இ-சிகரெட் பற்றிய தகவல்களை நெட்டிஸன்கள் அதிக அளவு வலைதளங்களில் தேடிவருகின்றனர்.
இ-சிகரெட் என்பது ஒரு மின் சாதனம் ஆகும். குழாய், பேனா போன்ற வடிவில் இருக்கும் இந்த இ-சிகரெட்களில் புகையிலைப் பயன்படுத்தாமல் ரசாயனங்களை பயன்படுத்தி புகைகள் உருவாகும். மேலும் பேட்டரிகளால் செயல்படும் இந்த இ-சிகரெட்டுகள் இரண்டு வகையில் உள்ளது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் இ-சிகரெட்டின் விலை குறைவு. ரி-சார்ஜபிள் வடிவில் வரும் இ-சிகரெட்களின் விளையும் அதிகம். ரசாயனங்களின் தாக்குதலும் அதிகம்.
இந்தியாவில் இ-சிகரெட்கள் உற்பத்தி செய்யவில்லை என்றாலும் 400க்கும் அதிகமான பிராண்டுகளில் விற்பனை, இங்கு கொடிகட்டிப் பறக்கிறது. மேலும் புகையிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தாலும் இ-சிகரெட்கள் பயன்படுத்துபவர்கள் அதிகம் இருப்பதால், புகையிலை உற்பத்தியாளர்கள் அதிக அளவு இழப்பைச் சந்தித்து வந்தனர். இந்நிலையில் தற்போது வந்த அறிவிப்புக்கு, புகையிலை உற்பத்தியாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
மேலும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் தான் முதன்முதலாக இ-சிகரெட் விற்பனை தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாடு முழுவதும் இ-சிகரெட்டிற்குத் தடை! அதற்கான காரணம் தெரியுமா?