நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் உள்ள வாராக் கடன் பிரச்னையை தீர்க்க மத்தியரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திவால் சட்ட சீர்திருத்தம், ஏ.ஆர்.சி போன்ற நடவடிக்கைகளுடன் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முயற்சியையும் கையாண்டது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் தேனா மற்றும் விஜயா வங்கிகளை பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கும் முடிவை நிதியமைச்சகம் அறிவித்தது.
இம்முடிவுக்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். வங்கி இணைப்பால் வேலையிழப்பு ஏற்படும், அத்துடன் இது வங்கிகளை தனியார் மயமாக்கும் செயலுக்கு வழிவகுக்கும் எனக் குற்றம்சாட்டி கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுபோன்ற பல்வேறு எதிர்புகள் மற்றும் நடைமுறை சிக்கல்களைத் தாண்டி இம்முடிவு இன்று முதல் அமுலுக்கு வந்தது.
வங்கிகள் இனைப்பு குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், '2019 ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தேனா மற்றும் விஜயா வங்கி வாடிக்கையாளர்கள் பாங்க் ஆப் பரோடா வங்கியின் வாடிக்கையாளர்களாக மாற்றப்படுகிறார்கள்' என்று தெரிவித்துள்ளது. இந்த இணைப்புக்கு முன்னதாக கடந்த வாரம், நிதி மேம்பாட்டிற்காக 5 ஆயிரத்து 42 கோடி ரூபாயை பாங்க் ஆப் பரோடவுக்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.
இந்த இனைப்பின் மூலம் பாரத ஸ்டேட் பாங்க், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்குப் பின் நாட்டின் 3வது பெரிய வங்கியாக பாங்க் ஆப் பரோடா வங்கி உருவெடுத்துள்ளது.