பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். அதன்படி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது, அதற்கு பதிலாக புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கம் செய்யவுள்ளதாகவும், இதனால் அதை அச்சடிக்கும் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதை மத்திய அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்துள்ள பதிலில், "மக்களின் தேவைக்கு ஏற்ப ரிசர்வ் வங்கியின் ஆலோசனையின்படியே ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது. 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு தற்போது இல்லை.
2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 32,910 லட்சம் இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருந்தன. அது இந்தாண்டு மார்ச் மாதம் 27,398 கோடியாக குறைந்துள்ளது.
கோவிட்-19 பரவல் காரணமாக ரூபாய் தாள்கள் அச்சடிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அச்சடிக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருந்த இருப்பில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டன" என்றார்.
இதையும் படிங்க: கரோனா காரணமாக முன்கூட்டியே முடியும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்