மும்பை: அமலாக்கத்துறை இயக்குனரகம் பதிவு செய்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அலுவலர் சந்தா கோச்சார் கணவர் தீபக் கோச்சாருக்கு உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 25) பிணை வழங்கியுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி வீடியோகான் நிறுவனத்துக்கு கடன்கள் வழங்கியது. இந்தக் கடன்கள் சட்டவிரோதமாக நடந்துள்ளன எனக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் மத்திய புலனாய்வு அமைப்பினர் (சிபிஐ) கோச்சார் (சந்தா, தீபக்) தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அமலாக்கத்துறையினரும் கோச்சார் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்தப் புகார் வெளியானதையடுத்து ஐசிஐசிஐ வங்கியில் தாம் வகித்துவந்த தலைமை செயல் அலுவலர் பதவியை சந்தா கோச்சார் ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர் மீதும் விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்ட வழக்கில் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் கைது செய்யப்பட்டார்.
![ICICI-Videocon PMLA case: HC grants bail to Deepak Kochhar ICICI-Videocon PMLA case Deepak Kochhar Deepak Kochhar bail ஐசிஐசிஐ-வீடியோகான் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தீபக் கோச்சாருக்கு பிணை சந்தா கோச்சார் தீபக் கோச்சாருக்கு மும்பை ஐசிஐசிஐ தீபக் கோச்சார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10594459_chanda-kochhar.jpg)
அவர் மீதான விசாரணை கீழமை நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்நிலையில் கடந்தாண்டு (2020) டிசம்பர் மாதம் பிணைக் கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பிணைக்கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிடி நாயக், தீபக் கோச்சாருக்கு பிணை வழங்கினார்.
வழக்கின் விசாரணையின்போது, “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து வருமானங்களையும் அமலாக்க இயக்குனரகம் கவனத்தில் எடுத்துள்ளதாக கோச்சார் வாதிட்டார், எனவே அவர் எந்த மூன்றாம் தரப்பு உரிமைகளையும் உருவாக்கவோ அல்லது பிணையில் வெளியே வந்தால் விசாரணையில் தலையிட வாய்ப்பில்லை” என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பண மோசடி வழக்கு: தொழிலதிபர் தீபக் கோச்சார் கைது