இந்தியாவில் அதிக அளவு வீட்டுக் கடன் வழங்கிவரும் ஹெச்டிஎப்சி, 2019-20ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் ஈட்டிய வருவாய் குறித்த தகவல்களைத் தாக்கல் செய்துள்ளன. அதன்படி ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ரூ.11,975.72 கோடி ரூபாயை வருவாயாக ஹெச்டிஎப்சி ஈட்டியுள்ளது. இது 2018-19ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் ஈட்டிய ரூ.11,580.05 கோடி ரூபாயைவிட அதிகம்.
அதேபோல வட்டிகள் மூலம் வரும் வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13.54 விழுக்காடு அதிகரித்து ரூ. 3,564 கோடியாக உள்ளது. 2019-20ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்காக ஹெச்டிஎப்சி நிறுவனம் 1,274 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
2019-20ஆம் நிதியாண்டின் இறுதியில் கோவிட்-19 தொற்றால் சில்லறை கடன் வழங்கப்படுவது பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 தொற்று காரணமாக மார்ச் முதல் மே மாதம் வரை மூன்று மாதங்கள் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்தத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இது தற்போது மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், அடுத்த காலாண்டில் லாபம் குறையலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதன் காரணமாக, 2019-20ஆம் நான்காம் காலாண்டில் ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் நிகர லாபம் 22 விழுக்காடு சரிந்து 2,232.53 கோடி ரூபாயாக உள்ளது.
ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் வராக்கடன் என்பது தற்போது ரூ.8,908 கேடியாக உள்ளது. இது அந்நிறுவனம் வழங்கியுள்ள மொத்த கடனில் 1.99 விழுக்காடாகும்.
கோவிட்-19 தொற்றால் தற்போது நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளதால், முதலீட்டாளர்களுக்கு கடந்தாண்டு வழங்கியே அதே ரூ.21ஐ டிவிடெண்டாக வழங்க ஹெச்டிஎப்சி முடிவு செய்துள்ளது.
லாபம் குறைந்துள்ளதால் ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் பங்குகள், இந்திய பங்குச் சந்தையில் 1.75 விழுக்காடு சரிந்து, தற்போது ரூ.1490க்கு வர்த்தகமாகிவருகிறது.
இதையும் படிங்க: சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்த கோட்டக் வங்கி