சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை, சி.டி.எச் சாலை, காவல் சோதனைச் சாவடி அருகில் காவல் உதவி ஆய்வாளர் ரவி தலைமையில் ஊர்காவல் படையினர் இன்று (ஆகஸ்ட் 9) காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞரை வழிமறித்து சோதனை செய்ய முற்பட்டனர்.
ஆனால், அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக வந்து உதவி காவல் உதவி ஆய்வாளர் ரவி மீது மோதினார். இதில், அவர் தூக்கி வீசப்பட்டு இடது காலில் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். பின்னர், அவருடன் இருந்த ஊர்காவல் படையினர் அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்து காவல் சோதனைச் சாவடியில் கதவை தாழிட்டு அடைத்தனர்.
இதையடுத்து, காவல் உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், காவல் அலுவலர்கள் அங்கு வருவதற்குள் அந்த இளைஞர் அங்கிருந்த கண்ணாடிகளை உடைத்து நொறுக்கி தப்ப முயன்றார். அதற்குள் சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் கனகராஜ் தலைமையிலான காவலர்கள் விரைந்து வந்தனர்.
அதன் பின்னர் காவலர்கள் அந்த இளைஞரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில், அவர் வில்லிவாக்கம், பாரதி நகரைச் சேர்ந்த கணேசன் (24) என்ற ரவுடி என்பது தெரியவந்தது. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிந்து கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.