தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர் தேர்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று, 8 ஆயிரத்து 888 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது. 2020 - 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்று காலி பணியிடம் போக மீதமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வயது அடிப்படையில் வேலை வழங்க கோரி 2019 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் 12 பேர் நாகை மாவட்டம் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மகாராணியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில், கரோனா ஊரடங்கு காரணமாக காவல் துறை தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்படுவதால், கடந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற காலி பணியிடம் போக மீதம் உள்ள விண்ணப்பதாரர்களை அப்பணியில் பணி அமர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கரோனா நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு ஆறு மாதங்களுக்கு சம்பளம் இல்லாமல் பணிபுரிய தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.