கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் காவல் சரகத்திற்குட்பட்ட ஜேம்ஸ் டவுன் பகுதியில் உள்ள மங்களா தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மணிகண்டன் (வயது 29) கூலி தொழிலாளி.
இவருக்கு மது, கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மணிகண்டன் தனது வீட்டின் அருகில் இருக்கும் குளக்கரையில் அடிக்கடி நண்பர்களுடன் மது குடித்து விட்டு கஞ்சா புகைப்பது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதி நண்பர்களோடு சேர்ந்து கஞ்சா அடித்துள்ளார். அப்போது, சிறிதளவு கஞ்சாவை எடுத்து மணிகண்டன் ஒளித்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நண்பர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அன்றிலிருந்து மணிகண்டன் திடீரென மாயமானார்.
இது குறித்து, மணிகண்டனின் உறவினர்கள் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான மணிகண்டனை தேடி வந்தனர்.
இந்நிலையில், அவரின் நண்பரான நிஷாந்த் உள்பட மூன்று நண்பர்களை பிடித்து தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி காவல் துறையினரை அதிர்ச்சி அடையச் செய்தது.
அதன்படி, கடந்த 31 ஆம் தேதி இரவு மணிகண்டன் நிஷாந்த் உள்பட 4 பேர் மணிகண்டன் வீட்டின் அருகில் அமர்ந்து கஞ்சா அடித்துள்ளனர். அப்போது, மணிகண்டன் சிறிதளவு கஞ்சா எடுத்து ஒழித்து வைத்துள்ளார். இதை மற்ற நண்பர்கள் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த அவர்கள் அரிவாளால் மணிகண்டனின் வயிற்றில் வெட்டியுள்ளனர். மணிகண்டன் அவர்களிடமிருந்து தப்பி ஓடியுள்ளார். வயிற்றில் வெட்டு விழுந்ததால் குளக்கரையில் அவர் சரிந்து விழுந்தார்.
தொடர்ந்து, மற்ற நண்பர்கள் மூவரும் சேர்ந்து மணிகண்டனை குளத்திற்குள் இழுத்துச் சென்று குளத்தின் நடுப் பகுதியில் நின்ற ஒரு செடியில் இவரை கட்டி தண்ணீரில் மூழ்கடித்து விட்டு வந்துள்ளனர்.
பின்னர், காவல், தீயணைப்பு துறையினர் அதே பகுதியில் உள்ள குளத்தில் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டு கண்டுபிடித்தனர். நான்கு நாள்கள் ஆகிவிட்டதால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
இதையடுத்து, அவரது உடல் உடற்கூறாய்விற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள மூவரிடமும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.