கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அன்னபூரணி கல்யாண மண்டபம் பகுதியில் வசிக்கும் முட்டை வியாபாரிக்குக் கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது.
அவரைப் பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று பாதித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் வசித்து வரும் அன்னபூரணி கல்யாண மண்டபம் பகுதிக்கு நகராட்சியினர் பாதுகாப்புத் தடுப்பு அமைத்து கிருமிநாசினிகள் தெளித்தும் அங்குள்ள பொதுமக்களுக்கு சுகாதாரத் துறையினர் மற்றும் நகராட்சியினர் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் அவரின் முட்டைக் கடை உள்ளதால் சார் ஆட்சியர் வைத்தியநாதன், அப்பகுதியில் ஆய்வு செய்து அங்குள்ள வியாபாரிகளிடம் பொதுமக்கள் நலன் கருதி கடைகளின் நேரத்தை குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதில், நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், வட்டாட்சியர் தணிகைவேல், ஆய்வாளர் மகேந்திரன் அவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் சார் ஆட்சியர் வைத்தியநாதன் கூறும்போது, 'கடந்த சில நாள்கள் முன்பு குமரன் நகர், கடைவீதி, கலைவாணர் வீதி ஆகியப் பகுதிகளில் கரோனா தொற்று ஏற்பட்ட நபர்களுக்குக் கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளை பரிசோதனை செய்ய ஆலோசித்து வருகின்றனர்’ என்றார்.
இதையும் படிங்க: 'சாலைய சீரமைங்க... இல்லனா ரேஷன் கார்ட நீங்களே வச்சிக்கோங்க'