சேலம் அரசு பொது மருத்துவமனை கூட்ட அரங்கில் மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன், சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் நிர்மல் சன் மற்றும் மருத்துவ குழுவினருடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து விளக்கமாக கேட்டறிந்தார். மேலும், காணொலி மூலம் தமிழ்நாட்டில் உள்ள மற்ற அரசு மருத்துவமனை முதல்வர்களுடன் கரோனா தொற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விவரமாக கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, "மருத்துவக் குழுவினரின் பரிந்துரையின் படி தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைகள் தினமும் அதிக அளவில் நடத்தப்படுவதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக தெரியவருகிறது. அதே நேரத்தில் கரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. மாநில அரசு முழு கவனத்துடன் இந்த பிரச்னையை கையாண்டு வருகிறது.
சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு உயர் தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. சேலம் அரசு பொது மருத்துவமனையில் 300 படுக்கை வசதிகள் இருந்த நிலையில் தற்போது 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் புதியதாக 574 முதுநிலை மருத்துவர்கள், 672 மருத்துவர்கள், 1230 மருத்துவப் பணியாளர்கள் இன்று (ஜூன் 8) கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது குறித்து அச்சம் கொள்ள வேண்டாம். அது சமூகப் பரவலா என்பது குறித்து மத்திய அரசு தான் பதிலளிக்க வேண்டும். மாநில அரசை பொறுத்தவரையில் கரோனா குறித்த தகவலை மிகுந்த வெளிப்படையாக பகிர்ந்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.