புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் லோடுமேன் சேகர். இவரது மகன் இடிமணி. இவர் கூத்தாடிவயல் கிராமத்தைச் சேர்ந்த இவரது நண்பர் சதீஷ் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் இடிமணி, சதீஷ் இருவரையும் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இடிமணி உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சதீஷ் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை குறித்து விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்த நபர்கள் இடிமணியின் நண்பர்கள் என்றும்; முன்விரோதம் காரணமாக கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, கொலை செய்த மூன்று பேரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர். மேலும், மருத்துவமனையில் உள்ள சதீஷிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.