கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட சின்னதாராபுரம் பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் வாய்க்கால் தூர்வாருதல், தடுப்புச்சுவர் கட்டும் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் தொடக்கி வைத்தார்.
பின்னர் இது குறித்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறுகையில், "அமராவதி ஆறு கரூர் மாவட்டத்தில் 78 கி.மீ தூரம் பயணிக்கிறது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்தில் சின்னதாராபுரம், நஞ்சைகாளகுறிச்சி, அணைப்பாளையம் ஆகிய கிராமங்களில் அமராவதி ஆற்றின் குறுக்கே மூன்று பழைய அணைக்கட்டுகளும், செட்டிபாளையம் அணைக்கட்டு என மொத்தம் நான்கு அணைக்கட்டுகளில் மூலம் பிரிந்து நான்கு பழைய பாசன வாய்க்கால்கள் மூலம் கரூர் மாவட்டத்தில் மொத்தம் 13 ஆயிரத்து 175 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
இதில், இன்று (ஜூன் 25) ரூ. 25 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகளை சின்னதாராபுரம் வாய்க்கால் தூர்வாரும் பணியின் மூலம் 1,877 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். தூர்வாரும் பணி மட்டுமல்லாது, வெள்ளத் தடுப்புச்சுவர்களும் கட்டப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, பொதுப்பணித்துறை அமராவதி வடிநிலக்கோட்ட உதவிசெயற்பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பொதுமக்களிடம் காவல்துறையினர் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்' - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்