புவி நிலப்பரப்பை கண்காணிப்பதற்காகவும், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்காகவும், ரிசாட் 2 பி ஆர் 1 என்ற செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி -46 ராக்கெட் உதவியுடன் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 615 கிலோ எடை கொண்ட இச்செயற்கைக்கோள் ஐந்து ஆண்டு காலம் நிலைக்கும் தன்மைக் கொண்டது.
இமேஜிங் உணர்வி (சென்சார்) மூலம், இந்தச் செயற்கைக்கோளானது, நாட்டின் பாதுகாப்பிற்கான தொழில்நுட்பங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீனப் போர்க்கப்பல்களின் ஊடுருவலைக் கண்டறிய, இந்த ரிசாட் 2 பி செயற்கைக்கோள் உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதில் உள்ள ரேடார் கருவிகள் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டவை. இதனால், இரவு, பகல் மட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் பூமியைத் தெளிவாக படம் பிடித்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும் வகையில் தரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராக்கெட் ஏவப்பட்டதைக் காண, சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் முதன்முறையாக பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இஸ்ரோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்கள், தகுந்த பாதுகாப்புடன் ராக்கெட் விண்ணில் பாய்ந்ததை கண்டுகளித்தனர்.
நடப்பாண்டில் இஸ்ரோ விண்ணில் செலுத்திய மூன்றாவது செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.