12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவடைந்து, நாளை முதல் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளன.
சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான மைதானம் இல்லாத நகரங்களில், பிரம்மாண்ட டிஜிட்டல் திரை மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் திட்டத்தை இந்திய கிரிக்கெட் கவுன்சில் வாரியம் அறிமுகம் செய்துள்ளது. கிரிக்கெட் மைதானத்தில் இருக்கும் சூழலை போலவே இந்த அரங்கம் அமைக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் பிசிசிஐ இந்த ஏற்பாட்டை செய்து வருகிறது.
இந்த வகையில் இந்த ஆண்டு திருச்சி நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை (7ம் தேதி) மாலை 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி தேசியக் கல்லூரி மைதானத்தில் இதற்கென பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 8000 பேர் வரை இந்த அரங்கத்தில் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இதற்கான அனுமதி இலவசமாகும். இதில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் என தனித்தனியாக அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.