ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் லீக் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில், பேட்டிங், பவுலிங் என அனைத்து பிரிவுகளிலும் அசத்திய இந்திய அணி, பாகிஸ்தான் அணியை ஏழாவது முறையாக வென்றது.
இதையடுத்து, முன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், நிருபர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அட்டகாசமான வெற்றியை பதிவு செய்துள்ள இந்திய அணிக்கு வாழ்த்துகள். அடுத்ததாக உலகக்கோப்பையை வெல்ல வாழ்த்துகள் என பதிவிட்டுருந்தார்.
![Hassan Ali tweet](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3625205_tweet.jpg)
இதற்கு, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசான் அலி, உங்களது விருப்பம் போல் அமைய எனது வாழ்த்துகள் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இதனால், இவருக்கு ஏகப்பட்ட கண்டனங்கள் வந்ததையடுத்து, இந்த பதிவை அவர் உடனடியாக நீக்கி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
முன்னதாக, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததற்கு ஹசான் அலியின் மோசமான பந்துவீச்சும் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. ஓன்பது ஓவர்களில் ஒரு விக்கெட்டையும் எடுக்காமல் 84 ரன்களை வாரி வழங்கினார்.
இதன் மூலம், உலகக்கோப்பையிலேயே அதிக ரன்களை தந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற மோசமான சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.