மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஜூன் 13ஆம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஹெட்ரோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மலர் வண்ணன், ரெஜின்பாஸ்கர், ஆஸ்டின் சுஜிந்திரன், ஜேசு என நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு வரையிலும் மீனவர்கள் கரை திரும்பாததால், அவர்களின் உறவினர்கள் மீன்வளத்துறை அலுவலர்களிடம் இதுதொடர்பாக மனு அளித்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது நடுக்கடலில் தத்தளித்த மீனவர் ஜேசுவை மீட்டனர். மற்ற மூன்று மீனவர்களை மீட்கக் கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்களும் மாயமான மீனவர்களின் உறவினர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இச்சூழலில் ரெஜின் பாஸ்கர் என்பவரின் உடலல் நேற்று முன்தினம் மாலை தஞ்சாவூர் மாவட்ட கொள்ளுமேடு மீனவர்களால் மீட்கப்பட்டது. தொடர்ந்து நேற்று ஆஸ்டின் சுஜிந்திரனின் உடலும் கொள்ளுமேடு மீனவர்களால் மீட்கப்பட்டது. தற்போதுவரை மலர்வண்ணனின் உடல் மட்டும் மீட்கப்படவில்லை.
இதையடுத்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், அரசு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.