திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மே மாதம் இறுதி வரை 120 நபர்கள் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கடந்த இரண்டு வாரத்தில் மட்டுமே 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 67 வயது மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவர், திண்டுக்கல் எம்.வி.எம் கல்லூரி அருகே வசித்து வந்தவர் என கூறப்படுகிறது. அதேபோல், நத்தம் பகுதியைச் சேர்ந்த 35 வயதான நபர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது கரோனாவிற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் திண்டுக்கல் எம்.வி.எம் அரசு கல்லூரியில் சிறப்பு மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.